உங்கள் வருகைக்கு நன்றி

தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.

வியாழன், 22 டிசம்பர், 2016

தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்கத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவிப் பணம் அளிக்கப்படுகிறது
ஆதரவற்ற முதியோர்
தமிழ்நாடு அரசு, கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிட்டு வரையறை செய்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாட்டில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்துச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
* அரசு பதிவு பெற்ற மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த மாமன்ற /நகர்மன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பம் ஆய்வு
இந்த விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின்பான பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ400 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.

Read more...

தமிழக அரசு, மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம்.

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம் சுகாதாரத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் மகப்பேறு உதவி தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 7 மாத கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை பிறந்த 3 மாதம் வரை இந்த உதவி தொகை பெற முடியும். 

குழந்தை பிறக்கும் முன் முதல் தவணையாக 4 ஆயிரம் ரூபாய், மகப்பேறு காலத்தில் 4 ஆயிரம் ரூபாய், மூன்றாவது தவணையில் 4 ஆயிரம் ரூபாய் என உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை எப்படி பெறுவது, யார், யாருக்கு கிடைக்கும். அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு சார்பு மருத்துவமனைகளில் (நகராட்சி, மாநகராட்சி மருத்துவமனைகள்) சிகிச்சை பெறுபவர்களுக்கு, குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவி தொகை வழங்கப்படும்.

முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு உதவி திட்டத்தில் உதவி பெற முடியும். 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தை பெற்றால், தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றால் இந்த திட்டத்தில் உதவி கிடையாது. சிலர், குழந்தை பெற்ற பின்னரே உதவி தொகை கேட்டு விண்ணப்பம் தருகிறார்கள். 

முன்கூட்டியே விண்ணப்பித்தால், கர்ப்பிணிகள் உதவி தொகை பெற்று பயன்பெற முடியும். விண்ணப்பதாரர்கள் எங்கே குழந்தை பிறக்கிறதோ அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளில் விண்ணப்பிக்கலாம். பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்று விட்டால் அங்கேயுள்ள முகவரி மூலமாக விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர்களுக்கு தடையின்றி உதவி தொகை வழங்கப்படுகிறது. 

Read more...

ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக தமிழக அரசு, நலத்திட்டங்கள்

ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக தமிழக அரசு, நலத்திட்டங்கள் சிலவற்றைச் செயல்படுத்தி வருகிறது. தகுதி உடைய ஏழைக் குடும்பத்தினர் அந்தத் திட்டங்களின்பலனைப் பெறுவது எப்படி?

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

ஏழைத் தாய்மார்கள் தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்யவும், பெண் கல்வியை மேம்படுத்தவும் தமிழக அரசு திருமண உதவித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு வருவாய் 24 ஆயிரத்துக்குக் குறைவான ஏழைப் பெண்கள் பயனடையலாம்.

யாருக்கு வழங்கப்படுகிறது?
இந்தத் திட்டத்தில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படித்துத் தேறிய, தேறாத மாணவிகள், பிரைவேட்டாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆன பெண்களின் தாய் அல்லது தந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், தாலிக்கான அரை பவுன் 22 கேரட் தங்கக் காசும் அரசு வழங்குகிறது. மலைவாழ் இனத்தினர் எனில் ஐந்தாம் வகுப்பு பாஸ் பண்ணினாலே போதுமானது.

இரண்டாவது பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலோ, தொலைதூரக் கல்வி அல்லது அரசு அங்கீகரித்த திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா முடித்த பெண்கள் திருமணத்துக்காக 50 ஆயிரம் ரூபாய் பணமும், அரை சவரன் தங்கக் காசும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மணமகளுக்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஒரு குடும்பத்தில், ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
திருமண தினத்துக்கு முன்னதாக 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உதவி வழங்கப்படும். வெகு அபூர்வமான கேஸ்களில், திருமண நாளுக்கு முந்தைய தினம் விண்ணப்பித்தாலும் உதவி அளிக்கப்படும். திருமண நாளன்றோ, அல்லது அதன் பிறகோ வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. 
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அப்பகுதியின் தாலுகா அலுவலர், கிராமப் பகுதிகளில் ஊராட்சிஅல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர்கள், சமூக நல அபிவிருத்தி அதிகாரிகள், கிராம நல அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது டிகிரி / டிப்ளோமா மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், திருமண அழைப்பிதழ் இவற்றை இணைத்து விண்ணப்பித்தால் உதவித் தொகை வழங்கப்படும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவைகள் மறுமண உதவித் திட்டம்:
கணவனை இழந்த பிறகு மறுமணம் செய்துக் கொள்ளும் எவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதிலும் இரண்டு வகை உண்டு. முதல் வகையில், எந்தவிதமான கல்வித் தகுதியும் கிடையாது. அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 15 ஆயிரம் ரூபாய்க்கான தேசிய சேமிப்புப் பத்திரம், தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்கப்படும்.
பட்டதாரிப் பெண்கள், டிப்ளோமா படித்தவர்களுக்கான இரண்டாவது வகையில், தாலிக்கு அரைப்பவுன் தங்கத்துடன், உதவித் தொகை 50 ஆயிரம் வழங்கப்படும். இதில் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு தேசிய சேமிப்புப் பத்திரமும் வழங்கப்படும்.
மறுமணம் செய்து கொள்ளும் விதவைப் பெண்ணுக்கு குறைந்த பட்சம் 20 வயதும், அவர் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு அதிக பட்சம் 40 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. மறுமணம் செய்து கொண்ட ஆறு மாதங்களுக்குள் விதவை என்பதற்கான சான்றிதழ், மறுமணத்துக்கான அழைப்பிதழ், கணவன், மனைவியின் வயது சான்றிதழ் ஆகியவற்றோடு இரண்டாம் பிரிவில் உதவி பெறுவதற்குரிய கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றோடு மாவட்ட சமூக நல அதிகாரி அல்லது சமூக நல விரிவாக்க அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். 15 நாட்களுக்குள் உதவித் தொகை கிடைக்கும்.

ஈ.வெ.ரா. மணியம்மை நினைவு ஏழை விதவைகளின் பெண்கள் திருமண உதவித் திட்டம்.

24 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் கொண்ட ஏழை விதவைத் தாய்மார்கள், தங்கள் பெண்ணின் திருமணத்தை நடத்திட மணியம்மை பெயரில் தமிழக அரசு உதவித் தொகை வழங்குகிறது. மணப்பெண்ணுக்கு 18 வயது நிறைந்திருக்க வேண்டும்; அதிக பட்ச வயது வரம்பு இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு மகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும். இதர விதிமுறைகள் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தைப் போன்றதே.

தாசில்தாரிடமிருந்து பெற்ற விதவைச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மகளின் வயதுச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தின் விதவை பென்ஷன் பெறும் பெண்கள் விண்ணப்பத்துடன் விதவை, வருவாய் சான்றிதழ் இணைக்கத் தேவை இல்லை.


அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்

பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள், திருமண வயதை அடையும் நேரத்தில், அவர்களின் திருமணத்துக்காக தமிழக அரசு அன்னை தெரசாவின் பெயரால் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திலும் கல்வித் தகுதி தேவையில்லாத ஒரு பிரிவு, பட்டப்படிப்பு, டிப்ளோமா படிப்பு முடித்த பெண்கள் என இரு பிரிவுகள் உண்டு. ஆதரவற்ற பெண் அல்லது அவரது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
திருமண நாளுக்கு முன்னதாக 40 நாட்களுக்குள் அவர் வசிக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யின் சான்றிதழ் அல்லது தாய், தந்தை இருவரது இறப்புச் சான்றிதழ், தாசில்தாரிடமிருந்து பெற்ற மணமகளின் அல்லது பாதுகாவலரது வருமான சான்றிதழ், வயது சான்றிதழ், பிரிவு 2ல் பயன்பெற விரும்புகிறவர்கள் டிகிரி / டிப்ளோமா சான்றிதழ் இவற்றோடு மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட சமூக நல அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், தகுதியானவர்களுக்கு உதவித் தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்படும்.

Read more...

கட்டாய திருமண பதிவு சட்டம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல மாநிலங்கள் கட்டாய திருமண பதிவு சட்டத்தை கொண்டு வந்துள்ளன.
நம் தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு,         2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்தே ஆகனும். அனைத்து மதத்தவர்களும் கண்டிப்பாக பதிவு செய்யனும்.
எங்கே பதிவு செய்வது.
உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். நமக்கு(வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிக்காடு பகுதி) வாலிகண்டபுரம்  அரசு மருத்துவ மனை   அருகில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனும்.
எப்படி பதிவு செய்வது.?
திருமணத்தை பதிவு செய்ய தனியாக விண்ணப்பங்கள் உள்ளன. அதை சார் பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது எதிரில் உள்ள எதேனும் பத்திரப்பதிவு கடையில் பெற்றுக்கொள்ளலாம். கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து, அவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அத்துடன் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து கொடுக்கணும்.
மேலும் தேவையானவைகள்.
இருவருக்கும் அடையாள அத்தாட்சி காப்பி கொடுக்கணும் (உதாரணமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வண்டி ஓட்டுனர் அட்டை போன்றவைகள்..)Ø
கணவருக்கும், மனைவிக்கும் தனித்தனியாக ஒரு சாட்சிகள்.( தந்தை ஆக இருப்பது நலம்).Ø
இந்த சாட்சிகளுக்கும் அடையாள அத்தாட்சி காப்பி இணைக்கனும்.Ø
திருமணம் நடந்து முடிந்த பள்ளிவாசலில் இருந்து திருமண சான்றிதல். குறிப்பாக மணமக்கள், ஆலிம் அவர்கள், சாட்சிகள் கையழுத்து போட்ட தப்தர் பக்கம் இருப்பது மிகவும் சிறந்தது. (சில சமயம் இந்த கையழுத்து பக்கம் இல்லை என்றால், பள்ளிவாசலில் கொடுக்கும் திருமண சான்றிதழை நோட்டரி பப்ளிக் அவர்களிடம் அட்டெஸ்ட் வாங்கனும்).Ø
ஆக, அனைத்து சான்றிதல்களையும் காப்பி எடுத்து, அதை உரிய அரசாங்க அதிகாரியிடம் அட்டெஸ்ட் பண்ணனும். லஞ்சம் வாங்காமல் அட்டெஸ்ட் பண்ணுவது, நம் பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் தான்.
மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.
ஆக மொத்தம் அனைத்து படிவங்கள், அட்டெஸ்ட் பண்ணப்பட்ட சான்றிதழ்கள், மணமக்கள், இரு சாட்சிகள் ஆகியவைகள் ரெடி தானே.. வாங்க செல்லுவோம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு.
அனைத்தையும் சார் பதிவாளர் அவர்களிடம் கொடுத்து விபரம் கூறவும். அவர் அனைத்தையும் அலுவலகம் உள்ளே இருக்கும் அம்மணியிடம் கொடுக்கச் சொல்லுவார். ரூல்ஸ் அதிகம் பேசினால் அம்புட்டுதான். அலைய விட்டுவிடுவார்கள்.
அது சரி இல்லை, இது சரியில்லை. இதில் க்கன்னா இல்லை, இதில் குனா இல்லை, அட்டெஸ்ட் சரியில்லை, போட்டோ கிளியர் இல்லை, இந்த மையால் எழுதக்கூடாது.. இப்படி பல வழிகளில் நம்மை ஆப்பு அடித்து விடுவார்கள்.
கட்டணம்விபரம் :
o
திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய்.
o 90
நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.
o
உங்களுக்கு கூடுதல் காப்பி வேண்டும் என்றால், ஒவ்வொரு காப்பிக்கும் பத்து ரூபாய் கூடுதல் கொடுக்கனும்.
o நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது உங்களுடைய ஒரிஜினல் அடையாள அட்டையை கொண்டு செல்லனும்.

உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு, கையழுத்து, கைநாட்டு வாங்கப்பட்டு விட்டால், முதல் கண்டம் தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம்.
பலர் ஆறு ஏழு முறை படை எடுத்தவர்களும் உண்டு. பலர் ஏன் திருமணம் பண்ணினோம் என்று நொந்தவர்களும் உண்டு. திருமணம் ஈசி ஆக நடந்து விடும், பதிவு செய்வதற்கு தாவு தீர்ந்து விடும்.
இனி, அவர்கள் கூறும் நாளில் சென்று (குறைந்தது ஒரு வாரம்), புரூப் (proof) பார்த்துவிட்டு, தவறுகள் இருந்தால் திருத்தி, அவர்கள் மீண்டும் கூறும் நாளில் சென்று உங்களுடைய கட்டாய திருமண பதிவு சான்றிதழ்களை பெற்று வாருங்கள்.
இன்னும் ஒரு விசயம் உள்ளது.. குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால், அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. நோ டென்ஷன்தண்டனை அதிகம் இல்லை.. தண்டனை 1000 ரூபாய் அபராதம் மட்டுமே.

Read more...

மாதுளையில் நன்மைகள்

சனி, 16 ஜூலை, 2016


மாதுளை பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. 

அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதளவு உள்ளன. 

கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 

இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

Read more...


ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

மருத்துவ குணம் கொண்ட ஒமம்

இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.

வயிற்றுப் பொருமல் நீங்க

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

ஓமத்திரவகம்

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் பலம் பெற

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets