உங்கள் வருகைக்கு நன்றி

தென்னை நார் ஏற்றுமதி தொழில் !

வியாழன், 20 ஜூன், 2013

சிறுவயதிலேயே பிசினஸ் மீதான ஆர்வத்தால், தென்னை நார் ஏற்றுமதி தொழிலில் வெற்றி பெற்ற, நேருமதி: நான், பட்டுக்கோட்டையை சேர்ந்தவள். பிளஸ் 2 வரை மட்டுமே படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே ஒரு, "பிசினஸ் பெண்மணி'யாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் திருமணம் முடிந்த பின்னும் குறையவில்லை. ஒரு முறை பேருந்தில் சென்ற போது, வழியில், தேங் காய் நார் உதிர்க்கப்பட்ட தூளை, காயவைத்து கொண்டிருந்தனர். இதில், என்ன தொழில் செய்வர் என்ற ஆர்வத்தால், மறுநாள் அதே இடத்திற்கு சென்றேன். அத்தூளை செங்கல் வடிவத்திற்கு மாற்றி வெளி நாடுகளுக்கு, "எக்ஸ்போர்ட்' செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தது. உடனே, அந்த முதலாளி வீட்டிற்கு சென்று, அத்தொழில் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டேன். கணவர் உதவியுடன், நார் துண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கினேன். தேங்காய் மட்டையை உடைத்து, கயிறு திரிப்பதற்கான நாரை எடுத்த பிறகு கிடைக்கும் தூளை, இயந்திரத்தில் கொட்டி நன்கு, "பிரஷர்' கொடுத்து அழுத்தினால், செங்கல் துண்டுகள் போன்ற வடிவத்தில் கிடைக்கும். ஒவ்வொரு துண்டும், 5 கிலோ எடை இருக்கும். விவசாய நிலத்தில், இந்த துண்டுகளை உதிர்த்து போட்டு தண்ணீர் பாய்ச்சினால், ஒரு துண்டு, 80 முதல், 90 லிட்டர் நீரை உறிஞ்சி, தன்னுள் வைத்துக் கொள்ளும். இதனால் செடிகளுக்கு, ஆறு மாதத்திற்கு தண்ணீரே தேவைப்படாது. இத்துண்டுகளை, வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை காலத்தில், மாதத்திற்கு, ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும். மழை காலங்களில், சிறு தொய்வு இருக்கும். நார் தயாரிப்பிற்கான அனைத்து வேலைகளையும், பெண்களே செய்கிறோம்; கடந்த, 10 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

Read more...

பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும் !

செவ்வாய், 11 ஜூன், 2013

பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. நல்ல வளர்ப்பால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான்.  இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்... பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி,  உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.
கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரியாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்' சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்...' என்று தீர்மானம் போடுவான்.

"முதியோர் இல்லம்' எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.
ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் சீஎன்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். 

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)


அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும். பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்' தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம். 

Read more...

ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும்.

புதன், 5 ஜூன், 2013

ஜூன் 5-ந்தேதி சுற்றுப்புற சூழல் சுகாதார தினம். இயற்கையின் எல்லா பிரிவுகளோடும் மனிதனுக்கு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது. தான் வாழும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு எல்லா தனி மனிதர்களுக்கும் உண்டு. சிறு சிறு அலட்சியங்களால் மாசுபடுத்தப்படும் சுற்றுப்புறம் இன்று பூமிக்கே பெரும் அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கிறது.

சுற்றுப்புறச்சூழலில் மாசு உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சவால் உலக வெப்பம் அதிகரிப்பு என்று உலக நாடுகள் ஒத்துக்கொண்டிருக்கின்றன. பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பது என்பது ஏதோ ஒரு காலநிலைச் செய்தி போல வாசித்து கடந்து போக வேண்டியதல்ல. இது மிகப் பெரிய மாற்றங்களை பூமியில் ஏற்படுத்தி மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாய் உருமாறிவிடும்.

1995க்குப் பிறகு பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தை பெருமளவுக்கு மீறியிருப்பது கவலைக்குரிய செய்தி. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு பூமியில் அதிகரித்திருப்பது பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். காடுகளை அழிப்பதும், எரிபொருட்களின் வெப்பமும் பூமியின் வெப்ப நிலை ஏற்றத்துக்கு இன்னும் சில காரணங்கள்.

முதலாவதாக உலக வெப்பம் அதிகரிப்பினால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதனால் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு. பங்களாதேஷ், நெதர்லாந்து, இங்கிலாந்தின் சில பகுதிகள் தாழ்வாக இருப்பதனால் முதல் பாதிப்பு அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். வெப்பம் சீராக இல்லாமல் அதிகரிப்பது இயல்பாய் நடந்து கொண்டிருக்கும் காலநிலையை முற்றிலும் சிதைத்து விடுகிறது.

வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் பூமியில் வீசுதல், சூறாவளி போன்ற பல இயற்கைச் சீற்றங்களுக்கும் இது காரணமாகி விடுகிறது. ஒழுங்கற்ற மழையும், கோடையில் அதிக வெப்பமும், பனிக்காலத்தில் கடும் பனியும் இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும். தற்போதைய வெப்ப அளவு இது வரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.

நான்கு லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த கரியமில வாயு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வளையத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப்பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

இந்த செயல் தொடர்ச்சியாக நடக்கும் போது பூமி முழுவதும் ஒருநாள் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் அபாயம் உண்டு. பசிபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் 1950களுக்குப்பின் பெருமளவில் வெப்பமடையத் துவங்கியிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் கடந்த 45 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்திருக்கிறது. கார்பன்டை ஆக்ஸைடின் அதிகப்படியான தேக்கம் கால நிலையில் பெரும் மாறுதலை உருவாக்கியிருக்கிறது.

மரங்கள் குறைவாக இருப்பது காலநிலை மாற்றத்தின் காரணிகளில் ஒன்று. நானூறு ஆண்டுகளுக்கு முன் மரங்களை வெட்டியதற்காக மன்னனால் மரண தண்டனை பெற்ற ராஜஸ்தான் பஷானியர்களைப் பற்றிய குறிப்பே நமக்கு சுற்றுப்புறச்சூழல் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழைய தகவல். வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும்போது நோய்களின் கூடாரத்தைச் சென்றடைகிறான். நாடு என்பது வீடுகளின் கூட்டம். வீடும் அதைச் சுற்றிய இடங்களும் தூய்மையாக இருக்கும்போது ஒட்டுமொத்த நாடும் தூய்மையாகிறது.

அமெரிக்காவில் ஓடும் வாகனத்திலிருந்து எதையேனும் வெளியே எறிந்தால் $ 500 அபராதம் செலுத்தவேண்டும். எனவே அங்கே யாரும் பொது இடங்களை அசுத்தமாக்குவதில்லை. அமெரிக்காவில் இருக்கும்போது சுற்றுப்புறத்தை சுத்தமாய் வைத்திருக்கும் இந்தியர்கள் கூட, இந்தியா வந்ததும் அதை மறந்து விடுவது தான் வேதனை. மரங்கள் நடுவது பரவலாக செயலாக்கத்தில் இருக்கும் ஒரு வழிமுறை. இது ஒளிச்சேர்க்கைக்காக கரியமில வாயுவை அதிக அளவில் உள்ளிழுப்பதால் பூமியின் கரிய மில வாயு அளவு குறைகிறது. இது பூமியின் வெப்ப அளவை சற்று குறைக்கிறது.

வெப்பத்தையும், காற்றையும் வேறு சக்தியாக மாற்றும் பல புதுப்புது முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றார்கள். இது பூமியின் வெப்ப அளவை சற்றே மட்டுப்படுத்தும் என்பது அவர்களின் கணிப்பு. மக்கள் தொகைப்பெருக்கமும் பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். வாகனங்களின் பெருக்கமும், அவை சரியான பராமரிப்புகளில் இல்லாததும் பூமியில் கரியமில வாயுவின் பெருக்கத்தை அதிகரிக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவும், இந்தியாவும் அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. மாசுகளை பல வகைகளாக பிரிக்கலாம். தூய்மையான இயற்கை காற்றில் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதும், தூசுகள் மிகுந்திருப்பதும், ஆலைகளின் புகைகளால் காற்று தன்னுடைய தூய்மையை இழப்பதும் காற்றை மாசுபடுத்தும் வகையில் சேர்கின்றன.

தண்ணீரை மாசுபடுத்துவது என்பது நிலத்தடி நீரை மாசுபடச் செய்யும் காரணிகளை உள்ளடக்கியது. தேங்கி நிற்கும் தண்ணீருக்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாமல் போகும் பட்சத்தில் தண்ணீர் மாசுபடுகிறது. கதிரியக்கம் போன்றவற்றால் சுற்றுப்புறம் மாசு அடைவது ஒரு வகை. தொழிற்சாலை அமிலங்களினால் சுற்றுப்புறங்கள் அசுத்தமடைவது இன்னொரு வகை. சாலை, விமான, தொழிற்சாலை சத்தங்களால் உடைக்கப்படும் இயற்கையான மௌனம் கூட ஒரு வகையான மாசு தான்.

அதிகப்படியான வெளிச்சத்தினாலும், வெளிச்சம் சார்ந்தவற்றாலும் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் இன்னல்களை வெளிச்ச மாசு என்றழைக்கிறார்கள். தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், மின்பொருள் கழிவுகள், உணவு, தண்ணீர் என எல்லா வகையான கழிவுகளும் நம்மை சிக்கலுக்குள்ளாக்குகின்றன. ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய், மன அழுத்தம், தூக்கமின்மை, தோல் நோய்கள், ரத்த அழுத்தம், கேட்கும் திறன் குறைதல் போன்ற பல நோய்கள் சுற்றுப்புறம் தூய்மையின்மையால் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் தண்ணீர் மாசு காரணமாக ஆண்டுக்கு 14,000 பேர் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன. தூய்மையான காற்று சட்டம், தூய்மையான தண்ணீர் சட்டம் என துறை வாரியாக இவை பெயரிடப்பட்டுள்ளன. சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அமில மழையைப் பெய்ய வைக்கிறது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெய்யும் அமில மழை ஏரிகளையும், நிலங்களையும் பாதிப்படையச் செய்கிறது. ஜெர்மனி, ஸ்காண்டினேவியா போன்ற இடங்களில் பெய்த அமில மழை காடுகளிலுள்ள மரங்களின் இலைகளையும், ஏன் வேர்களையும் கூட அழித்திருக்கிறது. பூமியின் கரியமில வாயு பெருக்கம், கடலின் கரியமில வாயு அளவை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறது.

கடல்நீர் மாசுபடுவதற்கு 60% விழுக்காடு சாக்கடை கடலில் கலப்பதே காரணமாகிறது. எண்ணைத் தன்மையும், சோப்பு போன்ற பிற ரசாயனங்களும் கடலில் தொடர்ந்து செல்வதால் கடல் அசுத்தமடைந்து கொண்டே இருக்கிறது. சுமார் இரண்டரை லட்சம் கடல் பறவைகள் இதன் மூலம் இறந்து விட்டதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நிலம் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது என்பதறிவோம்.

நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. நிலத்தில் விளையும் காய்கறிகளில் இந்த நச்சுத் தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்துவிடுகிறது. குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் கூட இந்த காய்கறிகளின் நச்சு கலந்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு மட்டுமே குடிநீர். அந்த தண்ணீரும் தற்போது குறைந்தும், மாசுபட்டும் வருவது உயிரினத்துக்கே விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும். உலகையே அச்சுறுத்தும் இந்த பிரச்சனையில் தனி மனித ஈடுபாடே ஒரு தீர்வை நல்க முடியும். எனவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயலாக்கவும் ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும். அதுவே வருங்கால தலைமுறையினருக்கு தரமான பூமியை நல்கும் -  

நன்றி மாலைமலர்

Read more...

ஸ்மார்ட் போன் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது

செவ்வாய், 4 ஜூன், 2013


"இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல் போய்விடுமோ" என, மனதளவில் பயப்படுவதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சிஸ்கோ என்ற பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம்,  30 வயதுக்கு கீழ் உள்ள , 3,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், பெரும்பாலானவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிவிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, சிஸ்கோ முதன்மை தொழில்நுட்ப அலுவலர், கெவின் பிளாக் கூறியதாவது: ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட பலர், ஒருவேளை அந்தபோன் தொலைந்து போய்விட்டால் தங்களால் எதுவுமே செய்யமுடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
அவர்களது ஆழ்மனதிலும் இந்த எண்ணம் நன்கு வேரூன்றிவிட்டதை எங்களால் உணரமுடிந்தது. ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால், தங்களது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக பலர் கருதுகின்றனர்.
நவீன யுகத்தின் கதாநாயகனாக உள்ள மொபைல் போன், "நோமோ போபியா" என்ற உளவியல் ரீதியிலான குறைபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. ஐந்து பேரில், ஒருவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு கெவின் பிளாக் கூறினார்.
காலையில் படுக்கையில் இருந்து எழுவது முதல், இரவு படுக்கப் போகும் வரை, தொலைபேசியே கதி என, ஏராளமான இளைஞர்கள் மாறிப்போயிருந்ததை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.
குயின்ஸ்லாந்தை சேர்ந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வரும், கைக்கேல் கார் க்ரெய்க் என்பவர் குறிப்பிடுகையில், "ஸ்மார்ட் போன் மீதான இந்த மோகம் பலரை பன்படுத்தியிருந்தாலும் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
10 நிமிடத்திற்கு ஒரு முறை, இவர்கள், தங்களது மொபைல் போனில், இ-மெயில் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து சோதிப்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு, 96 முறை இப்படி சோதிக்கின்றனர்" என்றார்.

Read more...

உற்சாகமாக தைரியத்துடன் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கே!


விருப்பமான கல்லூரியில் விண்ணப்பத்தை அளித்துவிட்டு வீட்டிற்கு மகிழ்வுடன் திரும்பினாலும், மனதிற்குள் இந்த மதிப்பெண்ணிற்கு இங்கு இடம் கிடைக்குமா? என்ற மனக்கலக்கம் நமக்குள் இருக்கும். இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில், வேறு சில கல்லூரிகளுக்கும் நமது விண்ணப்பங்களை அனுப்பியிருப்போம்.
நமக்கு மிகவும் பிடித்த கல்லூரியிலிருந்து  நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வருகிறது. வந்தவுடன், அங்கு நாம் எப்படி நடந்துகொள்வது? எப்படி பதில் சொல்வது? என்ற பதட்டத்தில் இருப்போம். அப்படிப்பட்ட நிலையில் நாம் அந்தக் கல்லூரி நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொள்வது? ஏனெனில், சிறந்த கல்லூரியில் போட்டிகள் நிறைந்த மதிப்பெண்ணுக்கு இடம் கிடைப்பது என்பது எளிதான விசயம் அல்ல...
நேர்முகத்தேர்வு நாளன்று சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் தோற்றம், நேர்முகத்தேர்வை அக்கறையுடன் எதிர்கொள்பவராக காட்ட வேண்டும். நன்றாக அயர்ன் செய்யப்பட்ட சட்டையுடனும், நன்கு வாரிய தலை முடியுடனும், நிமிர்ந்த நடையுடனும் உற்சாகமாக கல்லூரிக்கு செல்லுங்கள்.
கல்லூரிக்கு செல்லும்பொழுது அந்தக் கல்லூரியைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளுங்கள், அதனோடு நீங்கள் படிக்க விரும்பும் பாடத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படிப்பைப் பற்றிய உங்கள் மேலான எண்ணங்களை வெளிப்படுத்த தயங்காதீர்கள். ஏனெனில் கல்லூரிகள் வெறுமனே படிக்கும் மாணவர்களை விட ஆர்வமுடன் படிக்கும் மாணவர்களையே விரும்புகிறது.
நேர்முகத்தேர்வில் தேர்வாளரின் முகத்தைப்பார்த்து நேரடியாக பதில் சொல்லுங்கள். வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக தெளிவாக இருத்தல் வேண்டும். ஒரு சிலவற்றை கூறும்பொழுது, சில எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். ஆனால் அதே நேரம் அந்த எடுத்துக் காட்டுகள் கேள்வியை திசை மாற்றுவதாக இருத்தல் கூடாது. ஏதேனும் உங்களுக்கு பிடிக்காத கேள்விகள் இருந்தால் விவாதம் செய்யாதீர்கள். அவர்கள் பார்வையில் சிந்தித்து பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.
நேர்முகத்தேர்வுக்கு நீங்களும் சில கேள்விகளுடன் ஆயத்தமாக செல்லுங்கள். பல நேர்முகத்தேர்வாளர்கள் உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? என்பதை அறிய முயற்சிப்பார்கள்.  அப்பொழுது உங்கள் சந்தேகங்களை அறிவுப்பூர்வமாக கேட்க முயற்சி செய்யுங்கள்.
நேர்முகத்தேர்வின்போது நிமிர்ந்து உட்காருங்கள். தேர்வாளரின் மேசையின் மீது கைகளை வைக்காதீர்கள். நகைகள் மற்றும் இதர தேவையில்லாத அணிகலன்களை அணிந்து செல்ல வேண்டாம். நேர்முகத் தேர்வில் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளையோ, பொருளாதாரத் தேவைகளையோ கூறாதீர்கள்.
நேர்முகத்தேர்வில் நகைச்சுவையாக பதில் அளிப்பதை தவிருங்கள். உங்களுக்கு நகைச்சுவையாகத் தெரிவது பிறருக்கு தவறாகத் தெரியலாம். தன்னம்பிக்கையோடு செல்லுங்கள். போலித்தனமான பதில்களுடன் குழப்பமாக செல்ல வேண்டாம். உற்சாகமாக தைரியத்துடன் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கே!

Read more...

மாணவர்களே யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்உங்கள்,


மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில..........
* கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளைப் பார்க்க வேண்டும்.
* விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.
* அந்தக் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் என்.பி.ஏ.வால் அங்கீகரிக்கப்பட்டவையா என்று பார்க்க வேண்டும்.
* கடந்த ஆண்டு அந்தக் கல்லூரியில் மொத்த தேர்ச்சி விகிதம், படிக்கும்போதே வேலைவாய்ப்பைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
* அந்தக் கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முக்கியமான சிலவற்றை விசாரித்த பின்பு, கல்லூரியை தேர்வு செய்து படிப்பது மாணவர்களுக்கு நன்னை பயக்கும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets