உங்கள் வருகைக்கு நன்றி

அம்மாக்கள் கவனத்திற்கு!

வெள்ளி, 22 மார்ச், 2013


அம்மாக்கள் கவனத்திற்கு! குழந்தை மன நல மருத்துவர் கண்ணன்: என்னிடம் வரும் பெற்றோர், பெரும்பாலும் கூறும் ஒரே புகார், "என் பசங்க சாப்பிடவே மாட்டேங்கறாங்க...' என்பது தான். குழந்தைகள் குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் அவையெல்லாம் கவலைப்படக் கூடிய காரணங்கள் இல்லை."நம்ம குழந்தை நன்றாக சாப்பிடட்டும்' என்ற எண்ணத்தில், வயிற்றுத் தேவையைவிட, அதிக அளவிற்கு டிபன் பாக்சில் நிரப்பி அனுப்புகின்றனர் பல அம்மாக்கள். அதிலிருந்து, தங்கள் தேவைக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுகின்றனர் குழந்தைகள். மீதி, அப்படியே டிபன் பாக்சில் உள்ளது, என்பதை உணர வேண்டும்.காலை, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், சுவையாக சாப்பிட்டுப் பழக்கப்படும் குழந்தைகள், பள்ளியில் ஆறிப் போன உணவைத் தான் சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆறிய உணவில், இயல்பாகவே சுவை குறைவதால், சாப்பிடும் ஆர்வம் குறைவதும் இயல்பே.அதே போல், பெரும்பாலான பள்ளிகளில், உணவு இடைவேளை போதுமான அளவிற்கு இருப்பதில்லை. குழந்தைகள் உணவை வெறுக்க, இதுவும் ஒரு காரணம்.எந்நேரமும், குழந்தைகளுக்கு, நொறுக்குத் தீனி கொடுப்பதையும், "ஜங்க் புட்' கொடுப்பதையும் நிறுத்துங்கள். அவற்றின் தீமைகளை நன்கு புரியும் விதத்தில் அடிக்கடி நினைவூட்டி, வீட்டில் சமைத்த உணவின் அருமையை உணர்வதுடன், பெற்றோரும் அதையே உண்ண வேண்டும். காலை, மதியம், மாலை, இரவு என, நான்கு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற நேரம் எதுவும் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்ற கொள்கையை, பெற்றோர் கடைப்பிடித்தாலே, குழந்தைகள் ஆரோக்கியமான வீட்டு உணவை விரும்ப ஆரம்பித்து விடுவர்.செய்யும் உணவுகளில், சிறிய மாற்றங்களையும், சுவையையும் அதிகரிக்க வேண்டும். இதுவே போதும், குழந்தைகளுக்கு உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க!

Read more...

வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்

கோடை காலம் போல வெயில் கொளுத்துகிறது. வீட்டிற்குள்ளேயே அனல் அடிக்கிறது. இதற்கிடையே மின் தட்டுப்பாடு வேறு மக்களை படுத்தி எடுக்கிறது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடை, தூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால், வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனி, ஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.
மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவே, வாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவே, கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.
வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்கு, மேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.

Read more...

மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

திங்கள், 18 மார்ச், 2013


தமிழகத்தில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடியும் நிலையில், மாணவ, மாணவியர் வீட்டை விட்டு ஓடுவது, சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாணவியர், தங்களின் காதலர்களாகிய மாணவர்கள், இளைஞர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வீட்டை விட்டும், பெற்றோரை தவிக்க விட்டும், சென்று விடுகின்றனர். போலீசாரின் கணக்கெடுப்பின் படி, கடந்த ஆண்டில் பொதுத் தேர்வு முடிவுற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி மாணவியரில், 125 பேர், காதலர்களுடன் ஓட்டம் பிடித்தனர். இதில், பல மாணவியர், போலீஸ் வலையில் சிக்கினர். இவ்வாறு சிக்கியவர்களின் பெற்றோரை அழைத்து, பேச்சுவார்த்தை மட்டுமின்றி, மாணவியருக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், அவர்கள் மீண்டும், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவ, மாணவியர் தேர்வு எழுதி முடிக்கும் நிலையில், அவர்களின் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு, பிரத்தியேகமாக வீடுகளில் அறைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை கண்காணிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள், பணம், வங்கியின் ஏ.டி.எம்., கார்டு, செக் புத்தகம் ஆகியவற்றை பத்திரமாக மாணவ, மாணவியருக்கு தெரியாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நிலையிலும், முடிந்த பின்னரும் அவர்களின் தோழிகள், பழக்கமானவர்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம். மாணவ, மாணவியர் பணம் கேட்கும் பட்சத்தில், அந்த பணத்துக்கான தேவை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.


மாணவனோ, மாணவியோ காணவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதோடு, அவர்களின் புகைப்படங்களை வழங்கி உதவலாம். அவர்களின் பழக்க வழக்கங்கள், தொடர்புகள் குறித்து முழு விவரங்களையும், போலீசாரிடம், எவ்வித தயக்கமும் இன்றி தெரிவித்தால், நடவடிக்கை எடுக்க உதவி கரமாக இருக்கும். பள்ளி தேர்வு முடிவுக்கு வரும் நிலையில், மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

Read more...

மதி'யை மயக்கி மனிதனின் செயல்பாடுகளை முடக்கும் எந்த ஒரு பொருளுமே "போதை'தான்


மதி'யை மயக்கி மனிதனின் செயல்பாடுகளை முடக்கும் எந்த ஒரு பொருளுமே "போதை'தான். அந்த வகையில் ஆண்டுக்கு 2 மாதங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தும் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் 2-இல் தொடங்க இருக்கிறது.
 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எனும் தனியார் விளையாட்டு அமைப்பின் கிளை நிறுவனமான ஐ.பி.எல்., நாட்டின் பெரும் தொழில் அதிபர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் கூட்டுசேர்த்துக் கொண்டு, இந்திய மக்களின் "அதிதீவிர' கிரிக்கெட் ரசனையைப் பயன்படுத்தி கோடி கோடியாக பணத்தைத் தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொள்வதற்குத்தான் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்.
இப்போது வெற்றிகரமாக 6-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த  ஆண்டைவிட இப்போது விளம்பரங்கள் மூலம் மட்டும் 27 சதவீதம் அதிக வருமானம் ஈட்ட முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 நாட்டையும், நாட்டு மக்களையும் இந்த ஐ.பி.எல். எந்த அளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதைக் கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டிகளுக்கு டிக்கெட் வாங்க ஸ்டேடிய வாசலில் ரசிகர்கள் காத்துக்கிடப்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.  ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்தில் இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் அரங்கில் நடுநாயகமாக "சிக்கன உடையில்' நடனமாடும் "சியர் லீடர்ஸ்'. இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? இப்பெண்கள் யாருக்கு, எந்த வகையான உற்சாகத்தை அளிக்கிறார்கள் என்பதைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் விளக்கினால்தான் புரியும்.

Read more...

நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?

ஞாயிறு, 17 மார்ச், 2013


பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை! ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத்தத்துவ கோட்பாடுகளே. இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடையவும், ஆண்மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர். ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், அவர்கள் பொறுப்பாயிற்று இது.
இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று, வாழ்ந்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப்பதும், பெற்றோருக்கு ஒரு சுமையான பொறுப்பாகி விட்டது. கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பும் பெற்றோரைச் சேர்கிறது.
அதிக பெண்களைப் பெற்ற தந்தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது. ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்து கொண்டாலும், அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது; பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டால், குடும்பம் அவளைப் புறக்கணித்து, ஏற்பதில்லை.
இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?
பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல். அதிலிருந்து சில பகுதிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதை படித்து உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)


உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)

‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)


‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)

Read more...

கருப்பை கட்டிகள் ! (fibroid)

வியாழன், 14 மார்ச், 2013


கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம்.
கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேகம் பேரானோர் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

இந்த பைவ்ரோயிட்(fibroid) எனப்படும் கட்டிகள் என்றால் என்ன?

இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.

இது அரிதாக ஏற்படுகின்ற நோயா?

இல்லை .இது மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.

இது புற்று நோயா?

இல்லை. இந்த கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது. இதனால் யாருக்காவது fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.

இது எத்தனை வயதளவில் ஏற்படும்?

பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம்.

இது என்ன வகையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்?

நான் ஏற்கனவே சொன்னது போல இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.இவை அறிகுறிகளை ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம். மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல், அடிவயிற்றிலே எதோ இருப்பது போன்ற உணர்வு, அடிவயிறு வீங்குதல், அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல். நாரிப் பகுதியின் அடிப்பகுதியில் நோ ஏற்படுதல்.

குழந்தையின்மை ஏற்படுவதற்கு இது காரணமாகலாமா?

ஆம், சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற இடத்திலே) இருக்கும் போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.
ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு.மற்றும் இந்தக் கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை.(மிகவும் அரிதானவர்களிலேயே ஏற்படும்).
மற்றும் கருப்பையின் உள்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும் கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சினைகள் ஏற்படுமா?
சில வேளைகளில். குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை) மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.

இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்? ஸ்கேனிங் மூலம்
இதற்கான மருத்துவ முறைகள் என்ன?

இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.
இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பைப் பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy)
மற்றது கருப்பைப் பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy). குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப் பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.

Read more...

கேள்வி பிறந்தது இன்று

புதன், 6 மார்ச், 2013


கள்ளம் கபடம் அறியாத மனிதர்கள் யாரையும் சுலபமாக நம்பி ஏமாந்து விடுவார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது. இப்போது பால் விஷயம் இதற்கு ஒருபடி மேலே போய்விட்டது. நம்பிக்கை தளர்ந்துபோய்விட்டது. நாம் அருந்தும் பால் வெள்ளையாக இருந்தாலும்கூட நிஜமான பால் எவ்வளவு? கலப்படம் எவ்வளவு? என்ற கேள்வி பிறந்துவிட்டது. அப்போதைக்கு அப்போது கறந்து சைக்கிள் அல்லது டூ வீலரில் கொண்டுவந்து விநியோகிக்கப்படும் பாலையும்கூட நம்ப முடியவில்லை. சில விதமான பாக்கெட் பாலையும் நம்ப முடியவில்லை.
முன்பெல்லாம் லேக்டோ மீட்டர் போட்டுப் பாலில் எவ்வளவு தண்ணீர் என்று சோதிப்பார்கள். தண்ணீர்ப்பாலில் யூரியா, ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ் கலந்து சோதித்தால் தண்ணீர் கலந்ததைக் கண்டுபிடிக்க முடியாது. சாதாரணமாக சைக்கிள் - டூவீலரில் கறந்த பால் என்று விற்பவர்கள் மேற்கொள்ளும் கலப்படம் இது.
பிளாட்டிங் பேப்பரைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. இப்படி சில்லறையாகப் பால் வாங்காமல் பாக்கெட் பால் வாங்கினால் மட்டும் சுத்தமா என்ன? அங்கும் கலப்படம் உண்டு. மாடுகளின் காம்பிலிருந்து பீய்ச்சப்படும் கறந்த பால் சாதாரணமாக 7, 8 மணி நேரம் வரை தாங்கும். அதற்குள் விநியோகமாக வேண்டும். 8 மணி நேரத்துக்குப் பிறகு அது திரிந்துவிடும்.
அமுல், ஆவின் போன்ற நம்பிக்கையான பால் நிறுவனங்கள் கறந்த பாலைக் கொள்முதல் செய்து அது கெட்டுப் போவதற்கு முன்பே கொதிகலனில் காய்ச்சிய உடன் குளிரூட்டிப் பின் நிலைப்படுத்தப்பட்டு (அனுமதிக்கப்பட்ட கலப்படம்) பாக்கெட்டில் நிரப்பி விற்கின்றன. இது ""பாஸ்சரைஸ்டு மில்க்'' என்று அழைக்கப்படுகிறது. காய்ச்சிக் குளிரூட்டப்பட்ட பால் என்றும் கூறலாம்.
சாதாரணமாக இதைத்தான் பெரும்பான்மையான மக்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். தேவைக்கு ஏற்ப வழங்கலில் தட்டுப்பாடு வந்ததால் தனியார் பால் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. ராஜா பால், ராணி பால், அந்தப்பால், இந்தப்பால், சக்தி பால் என்று ஏராளமான பெயர்களில் பால் பாக்கெட்டுகள் - வெற்றிலை பாக்குக் கடைகளில்கூட விற்பனையாகி வருவதைப் பார்க்கின்றோம். இவையெல்லாம் நிஜமாகவே தரமான பால்தானா?
இதற்கு விடை காணும் முன்பு பதப்படுத்தப்பட்ட இதரப் பால் வகைகளையும் அறிவது நல்லது. இந்த இதர வகைப்பால் பிரிவில் கலப்பட வாய்ப்பு அரிது. கண்டன்ஸ்டு மில்க், பாலைச் சுண்டக்காய்ச்சி 50 சதவிகிதம் ஆவியாகும் முன் சர்க்கரையுடன் ஒரு ஆல்கலிப் பொருள் (புளிப்பும் காரப்பொருளும்) கலக்கப்படும். மேலை நாடுகளில் எவாப்பரேட்டட் மில்க், லாக்டிக் ஆசிட் மில்க், ஸ்கிம்டு லாக்டிக் ஆசிட் மில்க், புரோட்டீன் மில்க் என்றெல்லாம் பலவகை கூடுதல் விலையில் கிட்டும்.
இங்கு நாம் பாக்கட் பால், கறந்த பால் என்று சொல்லி விற்கப்படும் ""சைக்கிள் பால்'' பற்றி ஆராய்வோம்.
நிஜமான கறந்த பாலில் எவ்வளவு சத்துப் பொருள்கள் உள்ளன? அவற்றின் விகிதாசாரம் பற்றிய விவரமாவது:
சைக்கிள்களில் கொண்டு வரும் பாலில் தண்ணீர் கலப்பது வாடிக்கையானது. தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையும். வேறு தீமை இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது. அமோனியா, சோடியம் ஹைட்ராக்ûஸடு, கார்பன் ட்ரை ஆக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு இவற்றில் ஒன்று சேர்க்கப்படும். யூரியா எளிதில் கிடைக்கும். யூரியாவில் அமோனியா இருப்பதால் கலப்படம் செய்வோர் அதைப் பயன்படுத்துவார்கள்.
மேற்படி பாக்கட் பாலைவிட வாசலில் வந்து கறந்த பால் என்று விற்கப்படும் சைக்கிள் பாலில்தான் கலப்படம் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
அமுல், ஆவின் போன்ற பெரிய பொதுத்துறை பால் நிறுவனங்களில் பதனப்படுத்தும்போது கொழுப்பின் அளவைக் குறைக்க வெண்ணெய் எடுத்த பாலை மாவாக்கி அந்தப் பால் பவுடர் சேர்த்துத் தரப்படுத்தப்படுவதுண்டு. டோன்ட் மில்க் என்று வழங்கப்படும் அந்த வகைப் பால் அனுமதிக்கப்படுகிறது. அதில் புரதச்சத்து இருக்கும். இது மட்டுமே அனுமதிக்கப்பட்ட கலப்படம்.
சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயம் வழங்கிய விதிமுறைப்படி பால் கலப்பட தேசிய ஆய்வு தில்லியைச் சுற்றியும் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் பால் சாம்பிள் வாங்கிப் பரிசோதித்த போது பல்வேறு கலப்படங்கள் ருசுவாயின.
சுமார் 2,000 சாம்பிள்களில் சோதனை நடந்தது. அவற்றில் 30 சதவீதம் மட்டுமே நிஜமான பால் என்றும் 70 சதவீதம் கலப்படப் பால் என்றும் நிரூபணம் ஆயின. இந்த 70 சதவீதக் கலப்படம் என்பது மேலே விவரித்தபடி பாலின் கெட்டித் தன்மைக்காக மாவுப் பொருள்கள் (மைதா, ஸ்டார்ச்சு பவுடர்) கெடாமல் இருக்க டிடர்ஜண்டுடன் யூரியா முதலியன கலப்படப் பொருளாகப் பயன்படுத்துவது என்று தெரியவந்துள்ளது.
யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
 பசும்பாலை மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பாலுக்கு வைரஸ் எதிர்ப்பு சக்தி உண்டு என்றும் கூறப்படுகிறது. சிறார்களுக்கு நல்ல ஊட்ட உணவு. ஆனால் மருந்தே விஷமானால் மனித உடல் படும்பாடு என்ன?
ஆகவேதான் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கண்ட கண்ட பாக்கட் பாலை வாங்க வேண்டாம். பாலில் விஷமான வேதிப் பொருள் கலப்படத்தைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்குவது மாநில அரசுகளின் கடமையாகும்.
 யூரியா போன்ற ரசாயனம்
 சேர்த்த பாலை அருந்தினால்
வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால்
 சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்
 ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets