உங்கள் வருகைக்கு நன்றி

நீங்க புகை பிடிக்கல ஆனாலும் இதைப் படிங்க

புதன், 30 மே, 2012


புகை உயிருக்கு பகை: இன்று புகையிலை எதிர்ப்பு தினம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தால் மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

எத்தனை நச்சுபொருள்கள்: மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை.

அருகில் இருப்பவர்களுக்கும்: உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால் அருகில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"
ஸ்டைல்':வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இன்றே நிறுத்துங்கள்:புகை பழக்கத்தை: படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

வாய், கன்னப் புற்றுநோய்க்கு புகையிலையே காரணம்:மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புகையிலை பாதிப்பால் வாய், கன்னப் புற்றுநோய்க்கு ஆளாவோர் மாதம் 5 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.புற்றுநோய் வரும் காரணங்களில் புகையிலைக்கு 70 சதவீதம் பங்குள்ளது. இந்தியாவில் அதிகம்பேர் சிகரெட், பீடி மற்றும் வாய்க்குள் சுவைக்கும் புகையிலையால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவதில் பெண்கள் அதிகம் பேர் உள்ளனர். புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் கன்னம், நுரையீரலை மட்டுமின்றி, சிறுநீரகம், கணையம், சிறுநீர்ப்பையும் அதிகம் பாதிக்கும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு உதவிபேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: சிகரெட் புகையானது, அருகில் இருக்கும், "பாசிவ் ஸ்மோக்கர்' எனப்படும் பெண்கள், குழந்தைகள், உடன் பணியாற்றுவோரை பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள "நிக்கோட்டின்' புகைபழக்கத்திற்கு அடிமைப்படுத்தும் நச்சுப் பொருள். புற்றுநோயை ஏற்படுத்தும் 40க்கும் மேற்பட்ட வேறுநச்சுப் பொருட்கள் சிகரெட்டில் உள்ளன. புற்றுநோயை தவிர்க்க புகைப்பழக்கத்தை நிறுத்துவது ஒன்றே வழி. இதற்கென சாக்லேட்டுகள் வந்துள்ளன. இதனால், சுற்றுச் சூழல் பாதிப்பு, இருதய, நுரையீரல், ரத்தக்குழாய் நோய்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும். பில்டர் சிகரெட்டுகளால் எவ்வித பயனும் இல்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு புகையிலையால் வாய், கன்னம், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களில் 50 சதவீதம் பேர் வருகின்றனர். வாய்ப்புற்று நோயாளிகளுக்கு துவக்கத்தில் பற்களில் கறை ஏற்படும். நாக்கு, கன்னப்பகுதியில் வெள்ளைத் திட்டுகள் உருவாகும். அடுத்து லேசான புண் ஏற்படும். பின் கட்டியாக உருவெடுக்கும். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றால் நூறு சதவீதம் குணப்படுத்திவிடலாம். வாயில் ஆறாத புண், மூக்கில் ரத்தம் வருதல் இருந்தால் முதலிலேயே பரிசோதனை செய்துவிட வேண்டும். புகையிலையை அறவே தவிர்ப்பதே நல்லது.

Read more...

தூள் கிளப்பும் பிரியாணி பிஸினஸ்


எந்த பார்ட்டியா இருந்தாலும்... பிரியாணி உண்டா?’ என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. வேறு எந்த விருந்திலும் திருப்தியாகாத பலரும் ஒரு பிளேட் பிரியாணியில் சமாதானமடைந்து விடுவதைப் பார்க்கலாம். அதிலும் இஸ்லாமியர் செய்கிற பிரியாணிக்கு மவுசே தனி! சைவ, அசைவ பிரியாணி செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபாத்தி முத்து ஜோஹரா.
 

‘‘எட்டாவதுக்கு மேல படிக்கலை. கல்யாணத்துக்குப் பிறகு கணவரோட சம்பளத்துல குடும்பம் நடத்தறது சிரமமா இருந்தது. எங்க இனத்துல சின்ன விசேஷத்துலேர்ந்து நிக்ஹா வரைக்கும் எல்லாத்துக்கும் பிரியாணிதான். சுயஉதவிக் குழுவுல சேர்ந்தப்ப, அங்க யார் வீட்ல என்ன விசேஷம்னாலும், ‘நீங்க பண்ற பிரியாணி சூப்பரா இருக்குமே... செய்து தர்றீங்களானு கேட்பாங்க. நிறைய ஆர்டர் வருதே... இதையே ஏன் பிசினஸா பண்ணக் கூடாதுனு தோணுச்சு... அப்படி ஆரம்பிச்சதுதான்’’ என்கிற ஃபாத்திமுத்து, பிரியாணி செய்வதைக் கற்றுக்கொண்டு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.


 
என்னென்ன தேவை?

‘‘சைவத்துக்குத் தனியா, அசைவத்துக்குத் தனியா பாத்திரங்கள், பாசுமதி அரிசி, மசாலா பொருள்கள், காய்கறி, சிக்கன், மட்டன், மளிகை சாமான்கள்... ஆரம்பத்துல 500 ரூபாய் முதலீடு இருந்தாலே போதும்.’’


என்ன ஸ்பெஷல்?

‘‘பிரியாணிங்கிறது எங்களுடைய பாரம்பரிய உணவு. என்னதான் ஸ்டார் ஓட்டல்ல சாப்பிட்டாலும், நாங்க வீட்ல பண்ற பிரியாணிக்கு எதுவுமே ஈடாகாது. அந்த சுவைதான் ஸ்பெஷல்... பிரியாணிக்குத் தொட்டுக்க செய்யற கத்தரிக்காய் பச்சடி... அதுவும் எல்லாருக்கும் அதே சுவைல வந்துடாது.’’


ஒரு நாளைக்கு எவ்வளவு? பிசினஸ் வாய்ப்பு?

‘‘செய்முறை பழகி, கைப்பக்குவம் வந்துட்டா, ஒரு நாளைக்கு ஒருத்தரே 10 கிலோ வரை செய்யலாம். பிசினஸா செய்ய நினைக்கிறவங்க, முதல்ல அக்கம்பக்கத்து வீடுகளுக்கு கொஞ்சம் சாம்பிள் கொடுத்துப் பார்க்கலாம். அப்புறம் அவங்கவங்க வீட்ல நடக்கிற சின்னச் சின்ன விசேஷங்களுக்கு 1 கிலோ, 2 கிலோனு ஆர்டர் எடுத்து செய்து தரலாம். அப்படியே பழகிட்டா, அப்புறம் கல்யாண ஆர்டர் எடுத்துச் செய்யற அளவுக்கு பக்குவம் தானா வரும்.’’


லாபம்?

‘‘இடம் அல்லது விழாவுக்குத் தகுந்தாற்போல விலை நிர்ணயிக்கலாம். வெஜிடபுள் பிரியாணி ஒரு பிளேட் 100 ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி 130 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 160 ரூபாய் வரையும் விற்கலாம். தொட்டுக்க கத்தரிக்காய் பச்சடியும் தயிர் பச்சடியும் கொடுக்கணும். ரெண்டு மடங்கு லாபம் நிச்சயம்.’’


பயிற்சி?

‘‘பிரியாணி, கத்தரிக்காய் பச்சடி செய்ய ஒரே நாள் பயிற்சி... கட்டணம் 500 ரூபாய்.’’

Read more...

தைய்ராடு சுரப்பியின் முக்கிய பணி!


நமது உடலில் பல்வேறு சுரப்பிகள் சுரக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணிகளை சிரமேற்று செய்து வருகிறது. இதில் பலரும் அறிந்த சுரப்பிகளில் முதல் இடத்தில் இருப்பது தைராய்டு சுரப்பியாகும்.

இது கழுத்தின் முன் பக்கம் ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அதாவது, கழுத்தின் இரு பக்கத்திலும் அமைந்துள்ளது. இது பொதுவாக ஒரு அவுன்ஸ் (28.5 கிராம்) எடை கொண்டதாக உள்ளது.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு தைராய்டு சுரப்பிக்கு உள்ளது. தைராய்டு சுரப்பிக்கு அடிப்படையாக இருப்பது அயோடின் எனப்படும் ரசாயனம். இது பொதுவாக நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு மனித உடலிலும் 50 மில்லி கிராம் அளவிற்கு அயோடின் இருக்கும். இதனை சேமித்து வைத்து உடலுக்குத் தரும் பணியைச் செய்வது தைராய்டு சுரப்பிதான்.
தைராய்ட் சுரப்பி சுரந்ததும், அது ரத்தத்தின் மூலம், உடலின் அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
இதன் மூலம் நமது உடலின் வளர்ச்சி, எலும்புகளின் அமைப்பு, பாலுறுப்புகளின் வளர்ச்சி மற்றும் பல்வேறு பணிகளை நடைபெறுகிறது.
எனவே, தைராய்டு சுரப்பியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.
தைராய்டு சுரப்பியில் அதிகமாக சுரந்தால் ஒருவித பிரச்சினையும், குறைவாக சுரந்தால் வேறுவித பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் போது மருத்துவர்கள் கூறுவது தைராய்டு டெஸ்ட் எடுங்கள் என்பதுதான். எனவே, தைராய்டு பிரச்சினையை சரி செய்தால், உடல் நலப் பாதிப்புகள் கட்டுப்படும்.
சிலருக்கு வெளிப்படையாக தைராய்ட் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு தெரியும். அதாவது கழுத்துப் பாகம் சற்று வீங்கியபடி காணப்படும். இதனை வைத்தே தைராய்டு பிரச்சினையை அறிந்து கொள்வார்கள்.
எனினும், காலையில் சாப்பிடுவதற்கு முன்பு ரத்த பரிசோதனை எடுத்து அதன் மூலமே தைராய்டு பிரச்சினையை அறிந்து கொள்ள முடியும். ஒரு சில மருந்துகளே இதற்குத் தீர்வாக உள்ளது. சிலர் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளனர். சிலருக்கு உணவுக் கட்டுப்பாட்டிலேயே இதனை சரி செய்து விட இயல்கிறது. சில பெண்களுக்கு குழந்தைப் பேறு தள்ளிப்போகவும் தைராய்டு சுரப்பி காரணமாக அமைகிறது.


Read more...

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!


பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வீடாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.
ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.
உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.
வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.
கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி:-
பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.
ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.
உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.
புறக்கணிப்பு:-
இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.
ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.
அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.
இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?:-
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!” (அல்குர்ஆன் 5:2)
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)
இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.
அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!
சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்:-
பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.
வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.
அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.
மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.
இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.
அன்பளிப்பின் அடிப்படை:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 6636
இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.
இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!
திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.
பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.
இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.
எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள் விருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி:
ஷம்சுல் லுஹா (ரஹ்மானி) 
தீன்குலப் பெண்மணி

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets