உங்கள் வருகைக்கு நன்றி

முயல் வளர்த்தல்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012


ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும். 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper 

அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல... 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு  குட்டியைக் கூட நான் இழக்கல.

முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்கு விக்கறேன்.

 முயல் இறைச்சி கடைக்காரர்கள் முயலை எடைபோட்டு உயிரோடு வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் இறைச்சியை கிலோ ரூ.250க்கு மேல் விலை வைத்து விற்கிறார்கள். 


4 முயல் குட்டி மூலம் ஒரு ஆண்டில் 300 குட்டிகள் கிடைத்தது. இதன் மூலம் மாதம் சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை வருவாய். குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வருவாயும் அதிகரிக்கும். 

இவ்வாறு செல்வம் கூறினார். 

ரூ.25 ஆயிரம் போதும்

ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும். 

கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். 
உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.

வகைகள் 

இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும். 

ரோமம் விற்றால் காசு

சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம். 

முயல் இறைச்சியை பிரியாணி, சில்லிரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம்.  சந்தை வாய்ப்பு  ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள்விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.

கறியில் மருத்துவ குணம் 

முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.

தினமும் 2 மணி நேரம் போதும்

முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம். 

கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம். 

முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும். 

கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம். 
பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும். 

வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?

முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும். 

முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம். 

பல்கலை.யில் பயிற்சி

கோவை சரவணம்பட்டி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார் கூறியதாவது: 
குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. கிராமத்தில் குறைந்தபட்சம் 10 பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி தேவைப்பட்டால் நேரிலேயே வந்து பயிற்சி அளிக்கிறோம். தகவல் அறிய விரும்புபவர்கள் அருகிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும். 

முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். 

Read more...

செல்வம் கொழிக்கும் செடி வளர்ப்பு

அழகு, பயன் தரும் செடிகளை வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். வீடு, நிறுவனங்களில் இவை முக்கிய இடம் பிடிப்பதால் செடிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு நாற்றுப்பண்ணை (நர்சரி) நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவையில் ரோஜா ராஜா நர்சரி கார்டன் நடத்தி வரும் விஜயகுமார். அவர் கூறியதாவது: கோவையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது அழகு செடிகளுக்கான தேவை அதிகம் உள்ளது குறித்து அறிந்துகொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன் கோவை அவிநாசி சாலையில் நாற்று பண்ணை தொடங்கினேன். முதலில் குறைந்த விலையுள்ள அழகு, பழ செடிகளை விற்றேன். பின்னர் படிப்படியாக அனைத்து வகை செடிகளையும் விற்க தொடங்கினேன். ஒரு செடியை ரூ.1 லட்சம் வரை கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள். ரோஜா உள்ளிட்ட மலர்செடிகள், புல் வகைகள், லில்லி, தாமரை, ஆர்கிட்ஸ், அந்தூரியம், சைக்கஸ் பல்வேறு வகை செடிகளை விற்கிறோம்.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper 

புதுவகை செடிகளை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைத்து தருகிறோம். திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச நாற்று பண்ணையை தொடர்பு கொண்டு ஒரு மாதத்தில் செடியை வாங்கி கொடுப்போம். ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி செடிகளை விற்று வருகிறோம். தாவரங்கள் பற்றிய அடிப்படை விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்வது செடி வளர்ப்புக்கு அவசியம். மாதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். 
பூந்தொட்டிகள்: பூந்தொட்டிகள் அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டும் என்றால் சிவகங்கை, மானா மதுரை பகுதிகளில் மண்பாண்டம் உற்பத்தியாளர்களிடம் வாங்கலாம். கொய்யா, நெல்லி, சப்போட்டா ஆகியவை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலும், பெரிய குளத்திலும், மல்லி செடி மதுரையிலும், பாதையோர வேலி செடிகள், வண்ண மலர் கொடிகள், பல்லாண்டு காலம் பூக்கும் குத்து செடிகள், கல்வாழை, டாலியா, லில்லி, சம்பங்கி, சவுக்கு, காகிதப்பூ, பைன், குப்ரசுஸ், வைரோஸ்டீஜியா, வெட்ரியாவாலிபிலிஸ், முல்லை, மல்லி, காகிதப்பூ, நறுமணம் நிறைந்த செடிகள், அழகான இலை அமைப்பு கொண்ட செடிகளை கேரளா, கர்நாடகா, வடமாநிலங்களில் வாங்கலாம்.

வளர்க்கும் முறை

ஆர்கிட், அந்தூரியம் ஆகிய செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலிஹவுசில் தான் வளர்க்க வேண்டும். செம்மண், மணல் சிறிதளவு சேர்த்து தொழு உரம், தென்னை நார்க்கழிவு மண், மண்புழு உரம் ஒரே அளவு சேர்த்து செடி வைத்தால் 45 நாட்களில் வேர் பிடித்து விடும். வெயில் அதிகம் படாத வகையில் நிழல் வலையில் வைக்க வேண்டும். செடி அதிகம் வளராமல் இருக்க குறிப்பிட்ட சில தினங்களுக்கு ஒரு முறை கிளைகளை வெட்டி விட வேண்டும். கோடை காலத்தில் காலை, மாலை வேளைகளில் முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். பகல் பொழுதில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது. ரோஸ் செடிகளை வெயிலில் வைக்க வேண்டும். 
பூச்செடிகளுக்கு மறைமுக வெயில் தேவை. 

25 தினங்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும். செடிகளில் தண்ணீர் ஈரப்பதம் எப்போதும் இருக்க வேண்டும். கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாக இருக்கும். நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.  அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம். 


பதியம் போடுதல்: கார்னேஷன், செவ்வந்தி, ரோஜா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, மேற்கிந்திய செர்ரி, லிட்சி, குரோட்டன்ஸ், ரம்பூட்டான், கறிப்பலா போன்றவை இம்முறையில் வளரக் கூடியவை.

தண்டு துண்டு முறை:  திராட்சை, மாதுளை, பேரி, மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், லோக்வட், அத்தி, கிவி கறிப்பலா.

ஒட்டு கட்டுதல்: பெருநெல்லி, மா, சப்போட்டா, பலா, துரியன், ஆப்பிள், பேரி, வெண்ணெய் பழம், மேற்கிந்திய செர்ரி, சீதாப்பழம், ரம்பூட்டான், பெர்சிமன், ஆப்ரிகாட், லோக்வட். 

மொட்டு கட்டுதல்: அழகுச் செடிகளில் ஜிவடிவ மொட்டு அல்லது கேடயமொட்டு முறையில் பெருநெல்லி, இலந்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பீச், ப்ளம், வெண்ணெய் பழம், லிட்சி, லோக்வட், ஆப்ரிகாட் ஆகியவற்றை பெருக்கம் செய்யலாம்.

இதற்கான ஆலோசனைகளை வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண்துறையின் தோட்ட கலைத்துறையில் பெறலாம்.

கட்டமைப்பு, முதலீடு

செடிகளை வளர்க்க 4 சென்ட் இடம். அவற்றை வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலைக்கூண்டு அமைக்க ரூ.40 ஆயிரம். பனிக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம். பூக்கும் செடிகளுக்கான மறைமுக வெயில் தரும் கூடாரம் ரூ.30 ஆயிரம். பூந்தொட்டிகள் 200. பூச்செடிகளை வைக்க பாலிதீன் கன்டெய்னர் தேவைக்கு ஏற்றவாறு வாங்க ரூ.12 ஆயிரம். செடிகளை வெட்ட கத்தரிக்கோல் உள்ளிட்ட கருவிகள், இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி, மண் சமப்படுத்தும் கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், பைப் என மொத்தம் ரூ.2 லட்சம் தேவை. பல்வேறு வகை செடிகளுக்கு ஆரம்ப முதலீடு ரூ.10 ஆயிரம். மிக அதிக விலையுள்ள செடிகளை ஆர்டரின் பேரில் வாங்கி கொடுத்தால் போதும். செடிகள், 2 தொழிலாளர்களுக்கான மாத சம்பளம், மின் கட்டணம், உரம், இட வாடகை, போக்குவரத்து செலவுக்கு என மாதம் செலவு ரூ.30 ஆயிரம். செடிகள் டெலிவரி செய்ய சிறு வாகனம் ஒன்று இருந்தால் நல்லது. இத்தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும். 

லாபம் எவ்வளவு?

புங்கம், புன்னை, குல்மோகன், வாகை, சரக்கொன்றை, தான்றிக்காய், பெல்லாரி போன்றவற்றுக்கான விதைகளை விதைப்பண்ணை மற்றும் வேளாண் பல்கலை.யில் பெறலாம். 2 மாதம் வளர்த்து ரூ.50க்கு  விற்கலாம். இதில் ஒரு செடியில் ரூ.15 முதல் ரூ.18 வரை லாபம் கிடைக்கும். கிறிஸ்துமஸ் மரம் ரூ.450க்கும், கொய்யா, நெல்லி, மெர்ரி, பலா, சைனா ஆரஞ்சு ரூ.250 முதல் ரூ.300க்கும், கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட சைக்கஸ் செடி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கலாம். ரோஸ் செடிகளை ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யலாம். சிவப்பு, வெள்ளை, மெரூன், பிங்க், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் கிரிம்சன் கலர்களில் ரோஜா செடிகள் கிடைக்கும். ரோஜா செடிகளை பெங்களூரில் விலைக்கு வாங்கி விற்கும் போது ஒரு செடிக்கு ரூ.8 முதல் ரூ.20 வரை லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் நாமே பதியம் செய்து ரோஜா செடிகளை உற்பத்தி செய்து விற்கலாம். இவ்வாறு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். பேச்சபோடியம் என்ற ஒரு வகை கிழங்கு செடி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதில் 30 சதவீத லாபம் கிடைக்கும். 

பேர்ட் ஆப் பாரடைஸ் அழகு வகை செடியை ரூ.200க்கு வாங்கி அதிக உயரம் வளர்த்து பக்குவப்படுத்தி விற்றால் ரூ.5 ஆயிரம் வரை விற்கலாம். ஆனால் இது கிடைப்பது அரிது. எலுமிச்சை, பெருநெல்லி, ஆரஞ்சு, சீதாப்பழம், துரியன், லிட்சி, மங்குஸ்தான், மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், பிளிம்பி கெரம்போலா கரோனடா, சோக்வர், பால்ஸா போன்றவைகளுக்கு விதை தேவை. இதற்கான விதை வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் விதை பண்ணைகளில் கிடைக்கும்.  எலுமிச்சை விதை 10 கொண்ட பாக்கெட் விலை ரூ.50. செடிகளாக்கி விற்பனை செய்தால் ஒரு செடியை ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கலாம். செடியின் உயரம் மற்றும் எலுமிச்சை காய் விடுதல் வளர்ச்சியை பொருத்து செடியை அதிக விலைக்கு விற்கலாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets